லால்குடி வட்டம், பூவாளூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.90 லட்சத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
பூவாளூர் பிரிவுச் சாலையில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அரியலூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.1.90 லட்சம் ரொக்கம் இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள நொச்சியத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (45) என்பது தெரிய வந்தது. மேலும் உறவினரிடமிருந்து கடன் வாங்கி வந்த தொகை என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.
இதையடுத்து ரூ.1.90 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் கண்காணிப்புக் குழுவினர், அதை லால்குடி கோட்டாட்சியர் இரா. பாலாஜியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அப்பணம் சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.