திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே தனியார் பேருந்தும், காரும் வியாழக்கிழமை இரவு மோதிக் கொண்டதில் சம்பவயிடத்திலயே இருவர் உயிரிழந்தனர்.
காட்டுப்புத்தூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கஜேந்திரன் (31). இவரும், இவரது நண்பர் தவிட்டுப்பாளையம் சேர்ந்த முருகன் மகன் பாலன் (28) ஆகிய இருவரும் கஜேந்திரனுக்கு சொந்தமான காரில் மோகனூருக்கு சென்று விட்டு காட்டுப்புத்தூருக்கு உன்னியூர் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது, காரின் எதிரே காட்டுப்புத்தூரில் இருந்து வேலூருக்குச் சென்ற தனியார் பேருந்து மோதியதில், கஜேந்திரனும் பாலனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்டுப்புத்தூர் போலீஸார் சடலங்களை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.