தடகளப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசளிப்பு
By DIN | Published On : 04th August 2019 03:27 AM | Last Updated : 04th August 2019 03:27 AM | அ+அ அ- |

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட இளையோர் தடகளப் போட்டிகளில் வென்றோருக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட தடகளச் சங்கம் சார்பில், அண்ணா விளையாட்டரங்கில் தடகளப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. 14 முதல் 20 வயதுக்குள்பட்டோர் பிரிவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
சிறந்த தடகள வீரர்களாக எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளி மாணவர் விக்னேசுவரன் , கேம்பியன் பள்ளி மாணவர் ஜோன்ஸ் ஜோஸ்வா, திருச்சி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்கள் நிதிஷ்குமார் , நிஷான் ஆகியோர் தேர்வாகினர்.
இதுபோல், சிறந்த தடகள விளையாட்டு வீராங்கணைகளாக ஐ.ஏ.ஏ கிளப்பின் இளாசுரேஷ், ஹோலிடீமர்ஸ் மாணவி அஷ்ரப் நிஷா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கெவினா அஸ்வைன், பேபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், விளையாட்டு வீரர்களான சதா, அக்சயாஸ்ரீ, பேபி, வாசன், அபிமன்யூ, மாதேசுவரன் ஆகியோர் ஓட்டப்பந்தயங்களிலும், ஈட்டி எறிதலிலும் புதிய சாதனைகள் புரிந்தனர். அதிக பதக்கங்கள் பெற்று திருச்சி மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாம்பியன் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட தடகளச் சங்க உபத் தலைவர் டி.மணிகண்டன், நியூரோ ஒன் மருத்துவமனை மேலாண் இயக்குநர் எஸ்.விஜயக்குமார் உள்ளிட்டோர் விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகள், சான்றுகள், பதக்கங்களை வழங்கிப் பாராட்டினர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கே.பிரபு, திருச்சி மாவட்ட தடகளச் சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், சங்கர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். முன்னதாக, சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுதமதி ரவிசங்கர் வரவேற்றார். நிறைவில், மாவட்ட தடகளச் சங்க இணைச் செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.