திருச்சியில் மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
திருச்சி ஓலையூர் பகுதியைச் சேர்ந்தவர் சே. ஜெகன். இவர், தனது நண்பர்களுடன் திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் மீன்பிடிக்க வலையை போட்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வலையில் ஏதோ சிக்கியிருப்பதை அறிந்து வெளியே எடுத்தபோது சுமார் 8 அடி நீள மலைப்பாம்பு இருந்தது. இதனையடுத்து தகவலறிந்து வந்த வனத்துறையினரிடம் பாம்பை ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை எடுத்துச் சென்று துறையூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.