துறையூர் அருகே குடிநீர் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 18th July 2019 04:28 AM | Last Updated : 18th July 2019 04:28 AM | அ+அ அ- |

துறையூர் அருகே குடிநீர் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர் ஒன்றியத்திலுள்ள திருமானூர் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சிச் செயலர் மற்றும் ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் பொதுமக்கள் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனால் அதிருப்தியடைந்த அந்த கிராம மக்கள் எரகுடி, திருமானூர் வழியாக தா.பேட்டை, நாமக்கல், முசிறி செல்லும் சாலையில் புதன்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
தகவலறிந்து துறையூர் காவல்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.