உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திருச்சி மாநகராட்சி பகுதியில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருச்சி மாநகராட்சியில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்கள் பார்வைக்காக ஆணையர் ந.ரவிச்சந்திரன் பட்டியலை வெளியிட்டார். மேலும், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களில் உதவி ஆணையர்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கு பட்டியல் வெளியிடப்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் மொத்தம் 765 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 3, 58, 758, பெண் வாக்காளர்கள் 3, 78, 678, திருநங்கைகள் 81 பேர் என மொத்தமாக 7, 37, 517 பேர் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.