மணப்பாறை யை அடுத்த தீராம்பட்டி சவுரிராயன் தெருவைச் சேர்ந்தவர் ஆ. சிமியோன்ராஜ் (59). விவசாயியான இவர், செவ்வாய்க்கிழமை இரவு மணப்பாறை சென்றுவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தீராம்பட்டி பிரிவுச் சாலை அருகே சென்ற போது, திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற கார், இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் சிறிது தொலைவுக்கு சிமியோன்ராஜ் இழுத்துச் செல்லப்பட்டதால் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து அங்கு வந்த மணப்பாறை போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிமியோன்ராஜ் உயிரிழந்தார்.