குடிசைவாழ் பகுதிகளில் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு: திருச்சியில் 5 இடங்கள் தேர்வு
By DIN | Published On : 26th May 2019 02:48 AM | Last Updated : 26th May 2019 02:48 AM | அ+அ அ- |

குடிசைவாழ்பகுதிகளில் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மகளிரியல் துறை, மனிதகுடியிருப்புகளுக்கான இந்திய நிறுவனம் ஆகியவை இணைந்து, 2019ஆம் ஆண்டுக்கான மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
இதன் ஒரு பகுதியாக,
குடிசைவாழ் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதவிடாய் சுகாதார நாள் கொண்டாட்டத்தை நடத்தவுள்ளன. இதற்காக திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட குடிசைப் பகுதிகளில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, காஜாபேட்டைக்குள்பட்ட திரிசூல மாரியம்மன் கோயில் வளைவு, செந்தண்ணீர்புரம் மேம்பாலம் அருகிலுள்ள ராமமூர்த்தி நகர், பாலக்கரை காவல்நிலையம் அருகிலுள்ள செங்குளம் காலனி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகம் அமைந்துள்ள ஜெயில்பேட்டை, மரக்கடை பேருந்துநிலையம் அருகேயுள்ள குப்பாங்குளம் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் வசிக்கும் பெண்கள், சிறுமிகள், பெற்றோர்களிடம் மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேராசிரியர்கள், மகப்பேறு மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் விளக்கவுரையாற்றவுள்ளனர்.
மாதவிடாய் சுகாதாரம் குறித்த அறிவியல் உண்மைகள், சமூகப் பார்வை, நகர்ப்புற சுகாதாரத்தில் மாதவிடாய் சுகாதாரம் இணைத்தல், நாப்கின் பயன்பாடு ஆகியவை குறித்து விளக்கிக் கூறப்படவுள்ளது.
இதுதொடர்பாக, பாரதிதாசன் பல்கலைக் கழக மகளிரியல் துறைத் தலைவர் மற்றும் இயக்குநருமான ந. மணிமேகலை கூறியது:
குடிசைவாழ் மக்களுக்கான சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த விழிப்புணர்வு முகாமானது, முதல்கட்டமாக திருச்சி மாநகராட்சியின் காஜாபேட்டை, ராமமூர்த்தி நகர், செங்குளம் காலனி, ஜெயில்பேட்டை, குப்பங்குளம் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. வரும் செவ்வாய்க்கிழமை (மே 28) இதன் தொடக்க விழா காஜாபேட்டையில் நடைபெறவுள்ளது. திருச்சி மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன், மகப்பேறு மருத்துவர் எம். ரமணி தேவி, மனித குடியிருப்புகளுக்கான இந்திய நிறுவன ஆலோசகர் பரமேசுவர் ஆகியோர் தொடக்க விழா உரையாற்றுகின்றனர் என்றார் அவர்.