மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தாத்தா பலி: 4 வயது பேத்தி காயம்
By DIN | Published On : 26th May 2019 12:16 AM | Last Updated : 26th May 2019 12:16 AM | அ+அ அ- |

மணப்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முதியவர் சனிக்கிழமை உயிரிழந்தார். அவரது 4 வயது பேத்தி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருங்காபுரியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் கு. அய்யாசாமி (62). இவர், அருகிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வரும் தனது மகள் ஜெயந்தி, மருமகன் சிவகுமார் ஆகியோரிடம் அவர்களது 4 வயது மகள் வைஷ்ணவியை காண்பிப்பதற்காக சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.
திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேனிவயல் பகுதியில் சென்ற போது, திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற கார், முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அய்யாசாமி, வைஷ்ணவி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அய்யாசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தலையில் பலத்த காயங்களுடன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் வைஷ்ணவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்த போலீஸார், காரை ஓட்டி வந்த சென்னை கோடம்பாக்கம் சி. லட்சுமிநாராயணனை (67) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.