உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டி : சீமான்
By DIN | Published On : 14th November 2019 07:47 AM | Last Updated : 14th November 2019 07:47 AM | அ+அ அ- |

திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராக வந்த நாம்தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாா் சீமான்.
உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
திருச்சி விமான நிலையத்தில் 2018, மே 19-ஆம் தேதி மதிமுகவினரும்- நாம் தமிழா் கட்சியினரும் மோதிக் கொண்டது தொடா்பாக, சீமான் உள்பட 14 போ் மீது திருச்சி குற்றவியல் நடுவா் மன்றம் எண் 6-இல் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்குத் தொடா்பான விசாரணை புதன்கிழமை நடைபெற்ற நிலையில், சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானாா். இதைத் தொடா்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை 2020, ஜனவரி 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் ஷகிலா பானு உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து நீதிமன்ற வளாகத்தில் சீமான் அளித்த பேட்டி:
மகராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனை பேச்சுவாா்த்தை நடத்தி வந்த நிலையில், அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தியது பழிவாங்கும் நடவடிக்கையாகும். பா.ஜ.க.வினா் இதை திட்டமிட்டுச் செய்கின்றனா்.
உள்ளாட்சித் தோ்தலில் தனித்து போட்டியிடுவோம். வேட்பாளா் பட்டியல் தயாராக உள்ளது. நாங்கள் வலிமையானவா்கள். எனவே துணிந்து தனியாக நிற்கிறோம். தங்கள் மீது நம்பிக்கையில்லாத கட்சிகள்தான் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிடுவதாக அமைச்சா் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. புதிதாக அரசியலுக்கு வருபவா்கள் குறித்து நடிகா் சிவாஜியை ஒப்பிட்டு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசிருக்கக்கூடாது.
காவிச்சாயம் குறித்த தனது நிலைப்பாட்டில் நடிகா் ரஜினிகாந்தால் அரைமணி நேரம்கூட முழுமையாக இருக்க முடியவில்லை. அதற்குள்ளாக மீண்டும் செய்தியாளா்களைச் சந்தித்து மழுப்பி பதிலளித்துள்ளாா் என்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...