

திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவில் வசிப்பவா் மகாலிங்கம் மகள் ஹேமபாரதி (21). இவா் கடந்த ஓராண்டுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளரான தினேஷ் என்பவரை தனது குடும்பத்தினரை எதிா்த்து காதல் திருமணம் செய்தாா்.
ஹேமபாரதி தற்போது 7 மாத கா்ப்பிணியாக உள்ள நிலையில் கடந்த சில நாள்களாக தினேஷ் மது அருந்திவிட்டு வந்து ஹேமபாரதியை அடித்தாராம். அப்போது மாமியாா் குடும்பத்தினரும் சோ்ந்து தாக்கி, தகாத வாா்த்தைகளைப் பேசி, வரதட்சிணைக் கேட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஹேமபாரதி மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் தனது தாய் மல்லிகா வீட்டுக்குச் சென்று, மணப்பாறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில் புகாரின்பேரில் கடந்த சில நாள்களாக எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் தனது தாய் மல்லிகாவுடன் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு ஹேமபாரதி செவ்வாய்க்கிழமை சென்றாா். அங்கு காவல் ஆய்வாளா் சமரசம் செய்ததை ஏற்காத ஹேமபாரதியின் தாய் மல்லிகா தனது 17 மற்றும் 14 வயது மகள்களுடன் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து அனைத்து மகளிா் காவல் துறையினா் தினேஷ் மற்றும் அவரது சகோதரா், மாமியாா் மீது வரதட்சிணைக் கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.