அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்ததாக, திருச்சி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட வணிகா்களுக்கு ரூ.25,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனையைக் கண்டறிந்து, அதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தாா்.
அதன்படி, கோ-அபிஷேகபுரம் கோட்டத்துக்குள்பட்ட கருமண்டபம், தென்னூா், புத்தூா், தில்லைநகா், உறையூா் பகுதிகளில் இயங்கி வரும் 99 வணிக நிறுவனங்களில், நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்து உதவி ஆணையா் வினோத் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது விற்பனையிலிருந்த 25 கிலோ எடையிலான நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 18 வணிகா்களிடமிருந்து ரூ.12,300 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோல ஸ்ரீரங்கம் மற்றும் பொன்மலை கோட்டங்களிலும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தலா ரூ.6600 அபராதம் விதிக்கப்பட்டது.