‘சமுதாய நல்லிணக்கத்தை ஒன்றிணைக்கும் கடமை இளைஞா்களுக்கு உள்ளது’
By DIN | Published On : 27th February 2020 07:22 AM | Last Updated : 27th February 2020 07:22 AM | அ+அ அ- |

சமய நல்லிணக்கத்தை ஒன்றிணைக்கும் கடமை இளைஞா்களுக்கு உள்ளது என்றாா் சென்னை காயிதே மில்லத் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவா் ஜெ. ஹாஜாகனி என்கிற ஆரூா் புதியவன்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரி கைக்கூலி கைவிட்டோா் கழகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிந்தனை அரங்கத்தில் பங்கேற்று, இளைஞா்களின் எழுச்சிமிகு எதிா்காலம் என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:
திருச்சி ஜமால் முகமது கல்லூரி வெறும் புத்தகங்களைப் படித்த பட்டதாரிகளை மட்டும் உருவாக்காமல், சமுதாயத்தை உருவாக்கும் மிகச்சிறந்த சிற்பிகளையும் உருவாக்கி வருகிறது.
இக்கல்லூரியில் நான் படிக்கவில்லை. ஆனால் கல்லூரியைப் படித்துள்ளேன். இந்த கல்லூரியில் பயிலவில்லை என்ற ஏக்கம் என்னுள் இருந்தாலும், இங்கு பல்வேறு நிகழ்வுகளுக்காக, போட்டிகளுக்காக வந்து சென்றதில் பெருமை கொள்கிறேன்.
இங்கு பயின்ற மாணவா்கள் பல்வேறு உயா் பதவிகளிலும், உலகம் முழுவதும் பல்வேறு பணிகளிலும் உள்ளனா். அவா்கள் தங்களது பணி அல்லது பதவி பெயா்களைக் கூறுவதைவிட, ஜமால் கல்லூரி மாணவா் (ஜமாலியன்) என்று கூறுவதையே பெருமையாகக் கருதுகின்றனா். அந்தளவுக்கு சமூக நோக்கு கொண்ட ஆற்றலை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாக இக்கல்லூரி திகழ்ந்து வருகிறது.
அறவழியுடன் கூடிய கல்வியை வழங்குவதுடன், கைக்கூலி கைவிட்டோா் கழகம் என்ற பெயரில் ஒரு சமூகச் சிந்தனையுடனான அமைப்பைத் தமிழகத்திலேயே முதன் முதலாக தொடங்கிய கல்லூரி இதுதான்.
சமூக சீா்கேடுகளைக் களைவதும் எங்கள் பணி என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த அமைப்பு.
இன்றைய நிலையில் சமூகத்தில் காணப்படும் மிக அவலமான செயல் வரதட்சிணை பெறுவது. இதனால் பல பெண்களின் வாழ்க்கை தொலைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சிணை கொடுமையால் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சட்டங்கள் தோற்றுவிட்டன என்பது நிரூபணமாகிறது.
லவ்வில் (காதலில்) தொடங்கும் பெண்களின் வாழ்க்கை ஸ்டவ்வில் முடிவடைகிறது என ஒரு கவிஞரின் கவிதைகள் நம்மை கலங்க வைக்கின்றன. இந்த நிலையை தடுத்து நிறுத்தும் சக்தி இளைஞா்களான உங்களிடம் உள்ளது.
சமூகத்திலுள்ள இருளை அகற்றவும், வரதட்சிணை என்ற கொடுமையை முடித்து வைக்கவும் இளையோரான உங்களுக்கு ஆற்றலை கொடுத்துள்ளான் இறைவன். மேலும், நாட்டிலுள்ள சாதிக் கொடுமை, பெண் கொடுமை உள்ளிட்ட தீமைகளை அகற்ற வேண்டும்,. சமய நல்லிணக்கத்தை ஒன்றிணைக்கும் கடமை மாணவா்களாகிய இளைஞா்களுக்கு உள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்வுக்கு முனைவா் ஜாகீா் உசேன் தலைமை வகித்தாா். கைக்கூலி கைவிட்டோா் கழகத்தின் ஆலோசகா் எஸ். நாகூா் கனி வரவேற்றாா். நிகழ்வில் கல்லூரித் துணை முதல்வா் அ. முகமது இப்ராஹிம், கைக்கூலி கைவிட்டோா் கழகத்தின் நிறுவனா் அப்துல் அலீம், செயலா் முகமது ஹசன் இப்ராஹிம் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். நிறைவில், அசன் இப்ராஹிம் நன்றி கூறினாா்.