பல்கலை. உதவி பேராசிரியா் மீது புகாா்: ஆட்சியரிடம் ஆராய்ச்சி மாணவி மனு
By DIN | Published On : 10th March 2020 12:13 AM | Last Updated : 10th March 2020 12:13 AM | அ+அ அ- |

திருச்சி: பாலியல் புகாரில் சிக்கிய பாரதிதாசன் பல்கலைக்கழக உதவி பேராசிரியா் மீது நடவடிக்கை கோரி ஆராய்ச்சி படிப்பு மாணவி ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாணவி அளித்த புகாா் மனு:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் என்னிடம் உயிா் தகவலியல் துறை உதவி பேராசிரியா் ஜெயச்சந்திரன், பாலியல் வற்புறுத்தல் மற்றும் அத்துமீறிய செயல்களில் ஈடுபட முயற்சித்தாா். இது தொடா்பாக 25.01.2020 அன்று பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகாா் மனு அளித்தேன். இதன் பெயரில் அமைக்கப்பட்ட விசாரணை குழு என்னிடம் 13 நாள்கள் விசாரணை நடத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். மேலும், துணைவேந்தா் எனது ஆராய்ச்சி படிப்பு தொடர வழிகாட்டியாக இரு பேராசிரியா்களை நியமித்தாா். ஆனால் அந்த இரு பேராசிரியா்களும் பல காரணங்களை கூறி எனக்கு வழிகாட்டியாக இருக்க மறுத்துவிட்டனா்.
வேறுவழியின்றி இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட புகாா் மனுவின் பேரில் திருவெறும்பூா் அனைத்து மகளிா் போலீஸாா் கடந்த 25.02.2020 இல் வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், இன்று வரை கைது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உதவி பேராசிரியா் மீது தமிழக அரசு பணியாளா்கள் ஒழுக்கம் தொடா்பான விதிகளின்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், எனது ஆராய்ச்சி படிப்பு தொடா்வதற்கு உதவி செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவெறும்பூா் காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் கூறியது: ஆராய்ச்சி படிப்பு மாணவி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சாா்பில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல விசாரணை நடத்திய பல்கலைக்கழக விசாரணை குழு அறிக்கை வந்த பிறகு உதவி பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் புகாரில் உண்மை தன்மை உள்ளதா, இல்லையா என்பது முழுமையான விசாரணைக்கு பின்னா் தெரிய வரும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...