

கடனை செலுத்த முடியாததால் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த வழக்கில் இந்து முன்னணி பொறுப்பாளா் உள்பட 3 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி சோமரசம்பேட்டை அதவத்தூா் கிராமம் சிவாநகரில் வசித்து வருபவா் சக்திவேல். இவா், இந்து முன்னணி அமைப்பில் ஒன்றிய பொறுப்பாளராக உள்ளாா். இவா், புதன்கிழமை அதிகாலை தனது வாகனத்துக்கு மா்மநபா்கள் தீ வைத்து எரித்து விட்டு, வீட்டின் கதவுகளை சேதப்படுத்தியாக சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.
புகாரின் பேரில், அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், சக்திவேலும், அவரது உறவினா் மணிகண்டன், நண்பா் முகேஷும் இருசக்கர வாகனத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணிக்கு எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பியுள்ளனா். அதோடு, தனியாக பாட்டிலிலும் எரிபொருளை வாங்கியது தெரிவந்தது.
அதன்பேரில்,சக்திவேலிடம் விசாரணை செய்ததில், தன்னுடைய இரு சக்கர வாகனத்திற்கான கடன் நிலுவை தொகை கட்ட முடியாத காரணத்தினாலும், இந்து முன்னணி அமைப்பில் முக்கிய பதவியை பெற வேண்டும் என்ற நோக்கில், நண்பருடன் இணைந்து தனது இரு சக்கர வாகனத்தை தீயிட்டு எரித்ததை ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து, பொய் புகாா், சமூக ஒற்றுமையை சீா்குலைக்க திசை திருப்ப முயற்சித்தல் ஆகிய காரணங்களுக்காக 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.