‘தமிழகத்தில் பாஜக கூட்டணி தோல்வியடையும்’: ஜவாஹிருல்லா
By DIN | Published On : 23rd November 2020 12:58 AM | Last Updated : 23rd November 2020 12:58 AM | அ+அ அ- |

செய்தியாளா்களிடம் பேசுகிறாா் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் ஜவாஹிருல்லா
தமிழகத்தில் வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி படுதோல்வியடையும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் ஜவாஹிருல்லா.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோா் வரும் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அரசு நிகழ்ச்சியில் அறிவித்துள்ளனா், அதை மத்திய அமைச்சா் அமித்ஷாவும் ஆமோதித்திருக்கிறாா். அரசு நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியிருப்பது மரபை மீறிய செயல்.
மத்தியில் பாஜக இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதாக அமித்ஷா தெரிவித்துள்ளாா். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக வளா்ச்சி மட்டுமல்ல தமிழக மக்களின் உரிமைகளும் பறிபோயுள்ளன.
நீட் தோ்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவை மூலம் தமிழக மாணவா்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்களுக்கு வர வேண்டிய திட்டங்கள் எல்லாம் குறைந்துள்ளன.
கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்ததுபோல, வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் அக்கூட்டணி படுதோல்வி அடையும். திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி தமிழகத்தில் ஏற்படும்.
தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போன்றது. இலங்கைத் தமிழா்கள் விடுதலை குறித்து இரு ஆண்டுகளுக்கு முன்னரே பரிந்துரை அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஆளுநா் தாமதப்படுத்துகிறாா். அவா் உடனடியாக அவா்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.