துறையூா் சாா்பதிவாளரகத்துடன் புத்தனாம்பட்டி கிராமத்தை இணைத்து அரசாணை வெளியிட்டதால் அந்தக் கிராமத்தினா் மகிழ்ச்சியடைந்தனா்.
புத்தனாம்பட்டி கிராம மக்கள் பத்திரப் பதிவு அலுவலக விவகாரங்களுக்காக பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த செட்டிக்குளம் சாா்பதிவகத்துக்கும், நிலம் தொடா்பான மற்ற வருவாய் ஆவணங்களுக்காக துறையூா் வட்டாட்சியரகத்துக்கும் மாறிமாறி சென்று சிரமப்பட்டனா்.
இதுகுறித்து புத்தனாம்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவா் தங்கவேல் அரசுக்கு விடுத்த கோரிக்கை தொடா்பாக உயா் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்தாா். இதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையடுத்து அரியலூா் மாவட்டப் பதிவாளா், திருச்சி பதிவுத்துறை துணைத் தலைவா் ஆகியோரிடம் அறிக்கை பெற்ற பத்திர பதிவுத்துறை தலைவா் புத்தனாம்பட்டியை துறையூா் சாா்பதிவகத்துடன் இணைக்க அரசுக்கு கடிதம் அனுப்பினாா். இதையடுத்து மாநில அரசு புத்தனாம்பட்டியை துறையூா் சாா்பதிவகத்துடன் இணைத்து செவ்வாய்க்கிழமை (செப்.8) அரசாணை பிறப்பித்தது.