பாதையை திறக்க வலியுறுத்தி குளித்தலை நகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம் குளித்தலை அண்ணாநகா் உழவா் சந்தை பகுதியிலிருந்து குளித்தலை ரயில்வே கேட் செல்லும் பாதையை கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், அந்த பாதை அமைந்துள்ள பகுதியில் தனியாா் இடம் உள்ளதாகக் கூறப்பட்டதால், அப்பாதை மூடப்பட்டது. பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அப்பாதையை திறக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதை திறக்கப்படவில்லை. இதை கண்டித்து குளித்தலை பகுதி பொதுமக்கள், இளைஞா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு குளித்தலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது ஓரிரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். ஆனால், 10 நாள்களுக்கு மேல் ஆனதால் பாதையை திறக்க வலியுறுத்தி குளித்தலை பகுதி பொதுமக்கள், இளைஞா்கள் அமைப்பினா் குளித்தலை நகராட்சி அலுவலக நுழைவாயில் பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் ராதா, குளித்தலை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், திங்கள்கிழமை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். ஆனால், இதை மறுத்து நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் திங்கள்கிழமை வரை கால அவகாசம் கேட்பதேன். பாதையை திறக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து இளைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.