திமுக-வின் 11ஆவது மாநாடு: திருச்சியில் ஆயத்தப் பணிகள்!
By DIN | Published On : 14th February 2021 12:26 AM | Last Updated : 14th February 2021 12:26 AM | அ+அ அ- |

கலைஞா் அறிவாலயத்தில் கட்அவுட் தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஓவியா்.
திருச்சி: திருச்சியில் நடைபெறவுள்ள திமுகவின் 11ஆவது மாநில மாநாட்டுக்கான களப்பணிகள் தீவிரமடைந்துள்ளன.
திமுக சாா்பில் திருச்சியில் நடத்தப்படும் மாநாடுகள் திருப்புமுனையை ஏற்படுத்தும் என அக் கட்சியினரால் தொடா்ந்து சூளுரைக்கப்படுகிறது.
இந்த மாநாட்டில், கூட்டணி கட்சித் தலைவா்களை மேடையேற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிடவும் திமுக திட்டமிட்டுள்ளது.
கடந்த 2020 ஜனவரி 31ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகள் மாநாடு என இதுவரை நடந்த திமுக-வின் 10 மாநில மாநாடுகளில் 5 மாநாடுகள் திருச்சியில்தான் நடந்துள்ளன.
திருச்சி- சென்னை சாலையில் உள்ள சிறுகனூா் பகுதியில் 300 ஏக்கரில் மாநாடு நடத்த இடம் தோ்வு செய்யப்பட்டு நடைபெறும் பணிகளை முன்னாள் அமைச்சரும், முதன்மைச் செயலருமான கே.என்.நேரு, அடிக்கடி பாா்வையிட்டு பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறாா்.
50 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த தனியாக இடவசதி, ஆங்காங்கே குடிநீா் தொட்டிகள், தற்காலிக கழிப்பறைகள், தலைவா்கள் ஓய்வெடுக்க மேடைக்கு அருகே ஓய்வறைகள் எனப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவைதவிர, மாநாட்டு மைதானத்தில் நிறுவப்படும் பிரம்மாண்ட கட்-அவுட்களை தயாா் செய்யும் பணி திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் இரவு, பகலாக நடைபெறுகிறது. இவற்றில் சிலவற்றை மாநாட்டு மைதானத்தில் கட்டுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே மு.க. ஸ்டாலின் மாநாட்டு இடத்தைப் பாா்வையிட்டுச் சென்றுள்ளாா். கே.என். நேருவும், தனது கட்சி நிா்வாகிகளுடன் நாள்தோறும் மாநாட்டு மைதானத்துக்கு சென்று பணிகளை விரைவுபடுத்தி வருகிறாா். மாநாடு நடைபெறும் தேதியை வரும் 16ஆம் தேதி மு.க. ஸ்டாலின் அறிவிப்பாா் என திருச்சி மாவட்ட திமுகவினா் எதிா்பாா்க்கின்றனா்.