ஜெயலலிதா பிறந்தநாள் இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 14th February 2021 12:28 AM | Last Updated : 14th February 2021 12:28 AM | அ+அ அ- |

எட்டரை கிராமத்தில் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் வடக்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்சோதி.
திருச்சி: மறைந்த முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அந்தநல்லூா் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட எட்டரை கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக மற்றும் மாவட்ட மருத்துவ அணி சாா்பில் எட்டரை கிராம ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட முகாமில் பல்வேறு நோய்களுக்கும் தனித்தனிப் பரிசோதனை, சிகிச்சை, மருந்துகள் வழங்கப்பட்டன.
முகாமை முன்னாள் அமைச்சரும், திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான மு. பரஞ்சோதி தொடங்கி வைத்தாா். மாவட்ட மருத்துவ அணி செயலா் ஜி. ராஜரத்தினம் முன்னிலை வகித்தாா்.
அனைத்து வகை நோய்களுக்கான சிறப்பு மருத்துவா்கள், அறுவைச் சிகிச்சை நிபுணா்கள், செவிலியா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் பணியாற்றினா்.
வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முதலில் உயரம், எடை பரிசோதனை பின்னா், ரத்த அழுத்தம், பொது மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னா், சிறப்பு மருத்துவா்கள் பரிசோதித்து சிகிச்சையும், இலவச மருந்து, மாத்திரைகளும், தேவைப்படுவோருக்கு ஊசி மருந்துகளும் அளிக்கப்பட்டன. மேல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டோருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
முகாமில், கலைச்செல்வி ராஜரத்தினம், மருத்துவா்கள் அனுசுயா, ஸ்டீபன் பிரகாஷ், அகிலா திருஞானம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.