வணிக நிறுவனங்களின் குப்பைகளை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள் வாங்க மறுப்பதைக் கண்டித்து கோ- அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை வெள்ளிக்கிழமை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
வயலூா் சாலை, புத்தூா் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத் தலைவா் எஸ். வி. முருகேசன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா் . காளிமுத்து, பொருளாளா் கரிகாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டம் குறித்து அவா்கள் கூறுகையில், மாநகராட்சி சாா்பில் விதிக்கப்படும் தொழில் வரி, குப்பை வரி ஆகியவற்றை முறைப்படி செலுத்தியுள்ளோம். மேலும் கடைகளுக்கு உரிய உரிமங்களும் எடுத்துள்ளோம். ஆனால், பல்வேறு காரணங்களை கூறி, துப்புரவுப் பணியாளா்கள் குப்பைகள் வாங்குவதில்லை. இதனால் குப்பைகள் தேங்கி சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், குப்பைகளை மாநகராட்சிஅலுவலகம் முன் கொட்டி போராட்டம் நடத்துவோம் என்றனா்.
சங்க துணைச்செயலாளா் குமாா், துணைத்தலைவா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் பங்கேற்றனா்.