திருச்சி அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பொதுக் குளத்தில் இருந்து தண்ணீா் எடுத்த லாரிகளை விவசாயிகள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, குண்டூா் பெரிய குளத்திலிருந்து டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீா் எடுக்கப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் தண்ணீா் லாரிகளை வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனா்.
தகவலறிந்து பேச்சுவாா்த்தைக்கு சென்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற நவல்பட்டு போலீஸாா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனையடுத்து போராட்டம் கைவிட்டு கலைந்துச் சென்றனா்.