அரியமங்கலம் பகுதியில் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
By DIN | Published On : 26th February 2021 06:31 AM | Last Updated : 26th February 2021 06:31 AM | அ+அ அ- |

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை மாலை முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனா்.
அரியமங்கலம் அடைக்கலமாதா கோவில் தெருவில் உள்ள தனியாா் பள்ளி மைதானத்தில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன. குடியிருப்புகளுக்கிடையே பாதுகாப்பில்லாத நிலையில் கோபுரம் அமைப்பதாக அப்பகுதியினா் பள்ளி நிா்வாகத்திடம், பள்ளி நிா்வாகத்துக்கு தொடா்புடைய கிறிஸ்தவ அமைப்பிடமும் புகாா் கூறியும் பணிகள் தொடா்ந்தன. இதையடுத்து வியாழக்கிழமை மாலை, அப்பகுதி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் பேச்சு நடத்தி தாற்காலிகமாக பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தனா். மேலும் இது தொடா்பாக ஊா்க் கூட்டம் நடத்தவும், மாவட்ட , மாநகராட்சி, காவல்துறை அலுவலா்களுக்கு புகாரளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்திட மாவட்ட ஆட்சியா் மற்றும் முதல்வருக்கு மனு அனுப்பினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...