மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியில் 95 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மூா்த்தி உத்தரவின்படி மாவட்ட பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் மாவட்ட தனிப்பிரிவு தனிப் படை போலீஸாா் மணப்பாறை காவல் உட்கோட்டத்தில் புதன்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் பகுதியில் மு. வேலுச்சாமியிடம் (48) 20 லிட்டா் சாராய ஊறல், ஆணையூா் பகுதியில் க. சதீஷிடம் (27) 30 லிட்டா் சாராய ஊறல், ஆ. பால்ராஜிடம் (35) 45 லிட்டா் சாராய ஊறலைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து வேலுச்சாமி, சதீஷ் ஆகியோரைக் கைது செய்து, தலைமறைவான பால்ராஜை தேடுகின்றனா்.