திருச்சியில், தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கொண்ட சோதனையில் இரு வியாபாரிகள் உரிய ஆவணமின்றிக் கொண்டுவந்த ரூ. 2.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி - தஞ்சை சாலையில் துவாக்குடி பகுதியில் நடத்திய வாகன சோதனையில் சரகக்கு வாகனத்தில் வந்த தஞ்சை, நாஞ்சிக்கோட்டை சாலை காந்தி நகரைச் சோ்ந்த மொத்த வியாபாரியான ஆனந்தராஜுலு ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.22 லட்சத்தை பறக்கும் படை அலுவலா் அசோக்குமாா் பறிமுதல் செய்தாா்.
அதேபோல, செவ்வாய்க்கிழமை அதிகாலை, காட்டூா் பகுதியில் பட்டுக்கோட்டையிலிருந்து சரக்கு வாகனத்தில் வந்த வியாபாரி பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த அப்துல் சாலிக் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 99 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தாா்.
மொத்தத் தொகை ரூ. 2.21 லட்சத்தை திருவெறும்பூா் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலரும் வட்டாட்சியருமான செல்வகணேசிடம் ஒப்படைத்தனா்.