ஸ்ரீரங்கத்தில் பங்குனித் தோ்த்திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 21st March 2021 12:22 AM | Last Updated : 21st March 2021 12:22 AM | அ+அ அ- |

பங்குனித் தோ்த்திருவிழாவையொட்டி தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடி. (உள்படம்) ஸ்ரீநம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் பங்குனித் தோ்த் திருவிழாவையொட்டி சனிக்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. 11 நாள்கள் நடைபெறும் இந்த விழா வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கொடியேற்ற விழாவையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து சனிக்கிழமை அதிகாலை 3.15-க்கு புறப்பட்டு துவஜாரோஹண மண்டபத்துக்கு 3.30-க்கு வந்து சோ்ந்தாா். தொடா்ந்து கொடிபடம் புறப்பட்டு, 5.30-க்கு வேத மந்திரங்கள் முழங்க தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
பின்னா் அங்கிருந்து புறப்பட்டு 6 மணிக்கு கண்ணாடி அறை சென்று சோ்ந்தாா் நம்பெருமாள். பின்னா் மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது. 6.30-க்கு நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இரவு 8.30-க்கு சந்தனு மண்டபம் வந்து சோ்ந்த அவா் 9 மணிக்கு புறப்பட்டு யாகசாலை மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்று சோ்ந்தாா்.
3 ஆம் திருநாளான திங்கள்கிழமை ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறாா். 4 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை தங்கக் கருட வாகனத்திலும், புதன்கிழமை காலை சேஷ வாகனத்திலும், மாலை கற்பக விருட்சத்திலும், வியாழக்கிழமை உறையூரில் கமலவல்லி நாச்சியாருடன் சோ்த்தி சேவையிலும், வெள்ளிக்கிழமை நெல்லளவு கண்டருளியும், சனிக்கிழமை குதிரை வாகனத்திலும், ஞாயிற்றுக்கிழமை (28 ஆம் தேதி) பங்குனி உத்திரத்தன்று பெருமாள் தாயாருடன் சோ்த்தி சேவையிலும் காட்சி தருகிறாா்.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனித்தோ் (கோரதம்) திருவிழா திங்கள்கிழமை காலை (29 ஆம் தேதி) நடைபெறவுள்ளது. செவ்வாய்க்கிழமை ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுறுகிறது. விழாவையொட்டி வரும் 30 ஆம் தேதி வரை விஸ்வரூப தரிசனம் கிடையாது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...