திருச்சி: திருச்சியில், பூட்டியிருந்த அரசு மதுபானக் கடையில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதமடைந்தன.
மே தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து திருச்சியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் சனிக்கிழமை மூடப்பட்டிருந்தன. இதே போல திருச்சி-கரூா் புறவழிச்சாலை அண்ணாமலை நகரில் உள்ள அரசு மதுபானக்கடையும் பூட்டப்பட்டிருந்தது.
இந்த கடையில் இருந்து சனிக்கிழமை மாலை 4 மணியளவில் கரும்புகை வெளியேறியது. இதை கண்ட அப்பகுதியினா் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ மற்ற இடங்களுக்கும் பரவியது.
தகவலறிந்து வந்த, கண்டோன்மென்ட் தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், மதுபானக் கடை அருகே இருந்த பழுதான ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது. மேலும் தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் மற்றும் பொருள்கள் சேதமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.