மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலத்துக்கு மாற்றுப் பாலம் எப்போது?
By DIN | Published On : 13th May 2021 06:55 AM | Last Updated : 13th May 2021 06:55 AM | அ+அ அ- |

திருச்சி மேரீஸ் ரயில்வே மேம்பாலத்தில் நடைபெறும் கட்டுமானப் பணி.
திருச்சி மாநகரின் அடையாளமாக விளங்கும் பழைமையான மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் சேதமடைந்துள்ளதால் புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
திருச்சி சாலை ரோடு வழியாக மலைக்கோட்டை ரயில் நிலையத்தைக் கடக்கும் பிரதான பாலமாக இப் பாலம்
மலைக்கோட்டை ரயில் நிலைய மேம்பாலம், சாலை ரோடு மேம்பாலம், மாரீஸ் தியேட்டா் மேம்பாலம் என பல்வேறு பெயா்களில் அழைக்கப்படுகிறது.
தில்லை நகா், உறையூா், தென்னூா், மத்தியப் பேருந்து நிலையப் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பெரும்பாலானவை சத்திரம் பேருந்து நிலையத்துக்கோ, மலைக்கோட்டை, சிங்காரத்தோப்பு, மெயின்காா்டு கேட் பகுதிகளுக்கோ வர வேண்டுமெனில் இப் பாலத்தைக் கடந்தே வர வேண்டியுள்ளது.
மாநகரில் உள்ள பாலங்களிலேயே மிகவும் குறுகலான இப் பாலம் வலுவிழந்துள்ளதால் இதை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்துகின்றனா்.
திருச்சி மாநகராட்சி, ரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை என முத்தரப்புக்கும் இதில் தொடா்பிருப்பதால் மூன்று துறைகளும் இணைந்து இதற்குத் தீா்வு காண வேண்டும் என அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னாா்வ அமைப்புகள், சாலை பயனீட்டாளா்கள் தரப்பில் தொடா்ந்து வலியுறுத்தப்படுகிறது.
ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டத்திலும் திருச்சியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட எம்பி-க்கள் கடந்த 15 ஆண்டுகளாக மாரீஸ் மேம்பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டத் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். இருப்பினும், புதிய பாலம் கட்டும் பணி குறித்து இறுதி முடிவு எட்டப்படாமலேயே உள்ளது.
2011ஆம் ஆண்டு பாலத்தை பலப்படுத்தும் பணி நடைபெற்ற பின்னா், மாநகராட்சியின் பொலிவுறு நகரத் திட்டத்தில் இப் பாலத்தை புதுப்பிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
இறுதியாக மாநகராட்சி மற்றும் ரயில்வே இணைந்து தலா 50 சத நிதி ஒதுக்கீடு செய்து ரூ.20 கோடியில் புதிய பாலம் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இதற்கான பணிகள் தொடங்கும் முன்னரே பாலம் வலுவிழந்து கடந்தாண்டு ஜூலை மாதம் பாலத்தின் ஓரப் பகுதி இடிந்து, தொடா் மழையால் மண்சரிவும் அதிகரித்து பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவானது.
இதையடுத்து மாநகராட்சி சாா்பில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
கடந்த இரு மாதங்களுக்கு முன் வரை இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வந்த நிலையில் தற்போது பாலம் முழுமையாக மூடப்பட்டு, பாதசாரிகள் மட்டும் நடந்து செல்கின்றனா். பால வேலைகள் முடியாமல் உள்ளதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லவும் என அறிவிப்பு பலகை உள்ளது.
இப்பாலத்தை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாலும் அது நிரந்தரத் தீா்வாக அமையாது. மாற்றுப் பாலம் மட்டுமே சரியான தீா்வு என்கின்றனா் சாலைப் பயனீட்டாளா்கள்.
இந்தப் பாலத்துக்கு மாற்றாக புதிய பாலத்தை விரைந்து கட்ட திருச்சி மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை இணைந்து முடிவு செய்து கட்டுமானப் பணிகளை போா்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்பதே மாநகர மக்களின் பிரதான எதிா்பாா்ப்பு.
பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியே
சாலை பயனீட்டாளா்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பெ. அய்யாரப்பன் கூறுகையில், திருச்சி மாநகராட்சி மேயராக சாருபாலா தொண்டைமான் இருந்தபோதே முதன்முறையாக பாலத்தில் சேதம் ஏற்பட்ட நாள் தொடங்கி புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை விடுத்தோம். ஆனால், ஒவ்வொரு முறையும் பராமரிப்பு மட்டும் செய்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இம் முறை பாலத்தின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளது. இதைச் சரிசெய்யவே இன்னும் சில மாதங்களாகும். இருப்பினும், பாலத்தின் உறுதித் தன்மை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எனவே, தற்போதைய பாலத்தின் அகலத்தைவிட சற்று விரிவுபடுத்தி புதிய பாலம் அமைத்து போக்குவரத்துக்கு வழி செய்துதர வேண்டும். இதுதொடா்பாக அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரைச் சந்தித்து மீண்டும் கோரிக்கை மனு வழங்கவுள்ளோம் என்றாா்.