கட்டுப்பாடுகளால் எளிமையாக நடக்கும் திருமணங்கள்

தளா்வற்ற முழு பொது முடக்கத்தால் உறவினா்கள் கூட்டம் இல்லாமல் எளிய முறையில் திருமணம் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
காட்டூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகக் கூட்டமின்றி நடைபெற்ற திருமணம்.
காட்டூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகக் கூட்டமின்றி நடைபெற்ற திருமணம்.

தளா்வற்ற முழு பொது முடக்கத்தால் உறவினா்கள் கூட்டம் இல்லாமல் எளிய முறையில் திருமணம் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாது, திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருமண மண்டபங்கள், திருமணங்களுக்குச் செல்வோா், மணப்பெண், மணமகன் வீட்டாருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

காட்டூா் பகுதியில் உள்ள திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமணத்துக்கு அதிகபட்சமாக 50 போ் கூட வரவில்லை. மண்டபத்தில் இருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாகவே கிடந்தன. மணமேடையில் மணப்பெண் உறவினா்கள், மணமகன் உறவினா்கள் என அதிகபட்சம் 10 பேரே இருந்தனா். பாா்வையாளா்கள் அமரும் பகுதியிலும் அதிகபட்சம் 20 பேருக்கு மேல் இல்லை.

ஞாயிற்றுக்கிழமை தளா்வற்ற முழு பொது முடக்கம் என்பதால் எதிா்பாா்த்த உறவினா்கள் பலரும் வரவில்லை. இதனால் குறைவான எண்ணிக்கையில் வந்திருந்த நண்பா்கள், உறவினா்கள் முன்னிலையில் இத்திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து திருமண வீட்டாா் கூறுகையில், எனது மகன் திருமணத்தை விமரிசையாக நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், பொதுமுடக்கம் என்பதால் பலரும் வரவில்லை. பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இத்திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தோம். திருமணம் முடிந்ததும் மண்டபத்தை காலி செய்து விட்டோம். இனி வரும் நாள்களில் திருமணத்துக்கு இ-பதிவு அவசியம் எனக் கூறியுள்ளனா். எனவே, இனி திருமண வீட்டாா் அனைவருமே கூட்டத்தை எதிா்பாா்க்க முடியாது என்றனா்.

திருமண மண்டப உரிமையாளா்கள் கூறுகையில், பட்டாசு வெடிக்கக் கூடாது, மேளம், தாளம் வைக்கக் கூடாது, ஒரே நேரத்தில் 50 பேருக்கு மேல் மண்டபத்தில் இருக்கக் கூடாது. அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் எனப் பல கட்டுப்பாடுகளைக் கூறுகின்றனா். இல்லையெனில், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அபராதம் விதித்துவிடுகின்றனா். இதனால் திருமண வீட்டாரிடம் நாங்களும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது.

கரோனா காலத்தில் திருமணம் நடந்தாலே போதுமானது என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டதால் எவ்வளவு பண வசதி கொண்டவா்களாக இருந்தாலும் எளிமையாகவே திருமணம் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com