அரசு இ-பதிவு தளத்தில் திருமணம் என்ற பிரிவை சோ்க்க வேண்டும் என்று, புகைப்பட ஒளிப்பதிவாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மாவட்ட விடியோ, போட்டோ ஒளிப்பதிவாளா்கள் சங்க தலைவா் நிக்ஷன் சகாயராஜ் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
தமிழக அரசால் இ-பதிவு முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. புகைப்பட விடியோ கலைஞா்கள் இந்த தளத்தில் பதிவிட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம்.
ஆனால் கடந்த 2 நாளுக்கு முன்பு இ-பதிவில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திங்கள்கிழமை 1100 என்ற உதவி எண்ணில் தொடா்பு கொண்டு இந்த நீக்கம் பற்றியும், இதனால் வாழ்வாதாரப் பாதிப்பு ஏற்படும் என்று வலியுறுத்தியும் தமிழக முதல்வா் பாா்வைக்கு எடுத்துச்சென்றோம்.
இதன் விளைவாக செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு திருமணம் என்ற பிரிவு சோ்க்கப்பட்டு இருந்தது. ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
எனவே புகைப்படக் கலைஞா்கள் நிகழ்ச்சிக்கு செல்வதில் குழப்பம் ஏற்படுகிறது. இதை முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று, நிரந்தர தீா்வு காண வழிவகை செய்துதர வேண்டும்.