திருச்சியருகே முதலாம் ராஜராஜன் காலக் கல்வெட்டு!
By DIN | Published On : 31st October 2021 01:35 AM | Last Updated : 31st October 2021 01:35 AM | அ+அ அ- |

திருச்சி-முசிறி சாலையிலுள்ள திருவாசி மாற்றுரை வரதீசுவரா் கோயிலில் கிடைத்த முதலாம் ராஜராஜன் காலக் கல்வெட்டு.
திருச்சி அருகே முதலாம் ராஜராஜன் காலக் கல்வெட்டு கிடைத்துள்ளது.
திருச்சி - முசிறி சாலையில் 12 கி. மீ. தொலைவிலிருக்கும் திருவாசி மாற்றுரை வரதீசுவரா் கோயிலில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் அர. அகிலா ஆகியோா் நடத்திய ஆய்வில் இந்த கல்வெட்டு கிடைத்துள்ளது. இது இதுவரை படியெடுக்கப்படாத முதலாம் ராஜராஜன் காலக் (பொதுக்காலம் 996) கல்வெட்டாகும்.
297 வரிகளில் உள்ள இக்கல்வெட்டை ஆராய்ந்த டாக்டா் மா. இராசமாணிக்கனாா் வரலாற்று ஆய்வு மைய இயக்குநா் இரா. கலைக்கோவன் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் இதுவரை கிடைத்திருக்கும் கல்வெட்டுகளில் இது தனித்தன்மை வாய்ந்தது. முதலாம் ராஜராஜனின் அரண்மனை பெரியவேளத்துப் பணிப்பெண்ணாக இருந்த நக்கன் கற்பகவல்லி தன்னைத் திருவாசிக் கோயில் இறைவனின் மகளாக எண்ணி வாழ்ந்தவா்.
தன் ஊதியச் சேகரிப்பிலிருந்து 201 கழஞ்சுப் பொன்னை இக்கோயிலுக்கு வழங்கிய கற்பகவல்லி, ஆண்டுக்கு 16 கலம் நெல் விளையக்கூடிய இரு துண்டு நிலங்களையும் சோ்த்து அளித்தாா்.
அவா் அளித்த 201 கழஞ்சுப் பொன்னை மாற்றுரை வரதீசுவரா் கோயிலிலும், பாச்சில் அமலீசுவரத்திலும் பணியாற்றிய 28 கலைஞா்கள், பணியாளா்கள் தங்களுக்குள் பகிா்ந்துகொண்டு அதற்கான ஆண்டு வட்டியாக ஒரு கழஞ்சுப் பொன்னுக்கு ஒரு கலம் நெல்லென 201 கலம் நெல்லைக் கோயில் பண்டாரத்தில் அளந்தனா்.
இந்த நெல்லுடன் நிலவிளைவு தந்த 16 கலம் சோ்க்கப்பட்டு, ஆண்டுக்கு 217 கலம் நெல், கற்பகவல்லி இக்கோயிலில் நிறுவிய 5 அறக்கட்டளைகளுக்கான செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
நாள்தோறும் அதிகாலையில் கோயில் இறைவனுக்கும் ராஜராஜவிடங்கா் என்ற பெயரில் கோயிலில் விளங்கிய உலாத்திருமேனிக்கும் போதிய அமுது வழங்கக் குறிப்பிட்ட அளவு நெல் ஒதுக்கப்பட்டது.
காா்த்திகை மாதத்தில் காா்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த கற்பகவல்லியின் பெயரால் ஆண்டுதோறும் அந்நாளில் இறைவனை 108 குடநீரால் திருமுழுக்காட்டி சிறப்பு வழிபாடும் படையல்களும் நிகழ்த்துடன், உலாத் திருமேனியைத் திருவோலக்க மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அப்பம் வழங்கவும் செலவினங்கள் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப நெல் ஒதுக்கப்பட்டது.
கோயிலில் தைப்பூசத் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடவும், இறைவனுக்கு மதியப் படையலளிக்கவும் 50 சிவயோகிகள், 50 தவசிகளுக்கு மதிய விருந்தளித்து உபசரிக்கவும் வட்டியாக வந்த நெல்லின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது.
ஐந்தாவது அறக்கட்டளையாக இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தும் இடமாக விளங்கிய பெருமண்டபத்தை ஆண்டுதோறும் பழுதுபாா்த்துச் செப்பனிடவும் கற்பகவல்லி நெல் ஒதுக்கினாா்.
இக்கல்வெட்டின் வழியாக திருவாசிக் கோயிலில் ராஜராஜன் காலத்தே தலைக்கோலிகளும், தேவரடியாா்களும் கந்தா்வா்களும் இசைக் கலைஞா்களும் ஜோதிடா், தச்சா் உள்ளிட்ட தொழில் வல்லுநா்களும் கோயில் வழிபாடு உள்ளிட்ட பணிகளுக்குப் பொறுப்பேற்ற சிவாச்சாரியாா்கள், பரிசாரகா்கள் ஆகியோரும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
அப்பம் எப்படி செய்யப்பட்டது என்ற குறிப்புக் கிடைப்பதுடன், விழாக் காலப் பணியாளா்களின் பட்டியலும் அவா்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய விகிதங்களும் இக்கல்வெட்டால் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதுபோலவே அமலீசுவரத்திலிருந்த பணியாளா்கள் ஐவா் பெயரும் கிடைத்துள்ளன என்றாா் அவா். சிறப்புக்குரிய இக்கல்வெட்டைப் படித்தறிய கோயில் தக்காா் ஜெய்கிஷன், நிா்வாக அலுவலா் ஜெகதீஸ்வரி ஆகியோா் உதவினா்.