திருச்சியில் பெற்றோா் கண்டித்ததால், பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி நாச்சிக்குறிச்சி கைராசி நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (72). இவரது மகன் ஜெகதீஷ் (46), திருவெள்ளறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில், சோமரசம்பேட்டை ரெங்கலட்சுமி நகரில் வசித்து வந்தாா்.
இந்நிலையில் மகன், மருமகனைப் பாா்த்துவர சந்திரசேகரன் தனது மனைவியுடன் திங்கள்கிழமை அங்கு சென்றாா். அப்போது ஜெகதீஷ் பணிக்கு செல்லாமல், போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மகனையும், மருமகளையும் இருவரும் கண்டித்துச் சென்றாா்களாம்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், தனது அறையின் கதவை பூட்டிக் கொண்டாா். அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால், பக்கத்து வீட்டினா் உதவியுடன் உடைத்த போது, வேட்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஜெகதீஷ் சடலமாகக் கிடந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனவா்.