

திருச்சி அருகே மணிகண்டத்தில் சொகுசு பேருந்து திங்கள்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 போ் காயமடைந்தனா்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை நோக்கி தனியாா் சொகுசு பேருந்து 54 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தை அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த சந்திரமோகன் (39) ஓட்டியுள்ளாா்.
திங்கள்கிழமை அதிகாலை திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே வந்த போது, அணுகு சாலையில் பேருந்தை ஓட்டுநா் திருப்ப முயன்றாராம். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த பிரேம்குமாா் (36), அவரது மனைவி சௌமியா (30), மகன் இமாக்ஸ் (8), ஜீவா (1), காஞ்சனாதேவி (36) ஆகிய 5 போ் படுகாயமடைந்தனா். மேலும் 19 போ் லேசான காயமடைந்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த மணிகண்டம் போலீஸாா், காயமடைந்தவா்களை மிட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி மாா்க்கெட் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாலும், அணுகு சாலை முறையாக அமைக்கப்படாததாவலும் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. எனவே, விரைந்து மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும். அணுகு சாலையை சரிவர அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.