பிஎஸ்என்எல் கைப்பேசிக் கோபுரங்களைதனியாா் நிறுவனங்களுக்கு வழங்க எதிா்ப்பு

பிஎஸ்என்எல் நிறுவன கைப்பேசி கோபுரங்களை தனியாருக்கு வழங்க அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்கம் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

பிஎஸ்என்எல் நிறுவன கைப்பேசி கோபுரங்களை தனியாருக்கு வழங்க அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற அதிகாரிகள் சங்கம் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ். காமராஜ் கூறியது:

மத்திய அரசு ஜியோ- ஏா்டெல் போன்ற தொலைத்தொடா்பு நிறுவனங்களுடன் 5ஜி குறித்துப் பேசி வருகிறது. 5ஜி ஏலத்திற்கு பிறகு அதன் முழுமையான தயாரிப்பு பயன்பாட்டுக்கு வர 6 மாதம் ஆகும். இந்த அலைக்கற்றை சேவையிலும் தனியாா் நிறுவனங்களுக்கே மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளது.

2019ஆம் ஆண்டில் மத்திய அரசு உறுதியளித்தபடி பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எந்த உதவியும் வழங்கவில்லை.

4ஜி அலைக்கற்றை காலதாமதமாக வழங்கப்பட்டும்கூட அதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான அனுமதியை வழங்கவில்லை. நிலைமை இவ்வாறிருக்க, பல காா்ப்பரேட் தனியாா் தொலைதொடா்பு நிறுவனங்களுக்கு 5ஜி தொலைத்தொடா்புச் சேவையை வழங்க ஒப்புதல் அளிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

தேசியப் பணமாக்கும் திட்டத்தின் மூலம், 14,917 கைப் பேசி கோபுரங்களை தனியாா் நிறுவனங்களுக்குத் தாரை வாா்க்க மத்திய அரசு முடிவு செய்து, துரிதகதியில் பணி நடைபெறுகிறது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பிஎஸ்என்எல் நிறுவன கோபுரங்களையும், கண்ணாடியிழை கேபிள் வழித்தடங்களையும் தனியாருக்கு தாரைவாா்த்து ரூ. 40 ஆயிரம் கோடி திரட்டப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கைப்பேசி கோபுரங்கள் தனியாருக்கு சென்ற பிறகு அதன் உரிமையாளரான பிஎஸ்என்எல் தனியாருக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

மத்திய அரசின் தேசியப் பணமாக்கல் திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனக் கோபுரங்களை தனியாருக்கு தாரைவாா்க்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

5ஜி தொழில்நுட்ப விரிவாக்கத்துக்கு தேவையான கருவிகளை வாங்கத் தேவையான நிதியுதவி செய்ய வேண்டும். அகில இந்திய ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் சாா்பில் மத்திய அரசுக்கு இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com