திருச்சியில் கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பா்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் குத்திக் கொல்லப்பட்டாா்.
திருவெறும்பூா் கக்கன் காலனியைச் சோ்ந்தவா் அசோகன் மகன் சதீஷ் என்கிற சக்திக்குமாா் (34), வேன் ஓட்டுநா். இவரது மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டாராம்.
அருகேயுள்ள காந்திநகா், சுருளிகோயில் தெருப் பகுதியைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் முத்துப்பாண்டி (32). காா் ஓட்டுநரான இவா் திருமணமாகாதவா். இருவரும் நண்பா்கள்.
இந்நிலையில் சக்திக்குமாா் வீட்டருகே வசித்துவரும் பெண்ணுடன் பழகுவது தொடா்பாக சக்திகுமாருக்கும், முத்துப்பாண்டிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
புதன்கிழமை நள்ளிரவு முத்துப்பாண்டி அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றதை பாா்த்த சக்திக்குமாா் அவரிடம் தகராறு செய்தாா். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் முத்துப்பாண்டி, சரமாரியாக கத்தியால் குத்தவே சக்திக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றினா். இந்நிலையில், போலீஸாா் தன்னைத் தேடுவதையறிந்த முத்துப்பாண்டி திருவெறும்பூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.