மணப்பாறை: மணப்பாறை அருகே காதலித்து கர்ப்பமாக்கிய காதலுடன் சேர்த்து வைக்கச் சொல்லி நிறைமாத கர்ப்பிணியான காதலி, காதலன் வீட்டின் முன் நள்ளிரவில் தர்னாவில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த மணப்பாறை தொப்பம்பட்டியைச் சேர்ந்த சித்ரா(29). இவர் மணப்பாறையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில், பொம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(29) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஒன்பது ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவருக்குமிடையே காதல் வளர இருவரும் தனிமையில் சந்தித்த நிலையில் சித்ரா கர்ப்பமாகி உள்ளார். இதனிடையே ரமேஷின் பெற்றோர்கள் ரமேஷிற்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்ததை அறிந்த சித்ரா கடந்த ஆண்டு நடக்கவிருந்த திருமணத்தை மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ரமேஷின் திருமணத்தை தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், நேற்று இரவு காதலித்து கர்ப்பமாக்கிய காதலுடன் சேர்த்து வைக்கச் சொல்லி நிறைமாத கர்ப்பிணியான சித்ரா, ரமேஷின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற மணப்பாறை காவல்துறையினர் சித்ராவை சமரசம் செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் கர்ப்பிணி பெண் கிராம பகுதியில் காதலன் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.