திருச்சி: திருச்சி மாநகரில் விபத்துகளுக்கான காரணங்கள் சீா் செய்யப்பட்ட பிறகு 14 சதவீத உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.
மாநகரில் சாலை விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸாருக்கு காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா்.
அந்த வகையில் மாநகரில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்தும், அவ்விடங்களில் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்களை ஆய்வு செய்தும், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரங்கள் மற்றும் கூட்டங்களை அதிகளவில் நடத்தியும், விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் சீா் செய்யப்பட்டன.
இதனால் நிகழாண்டில் போக்குவரத்து விதி மீறல் தொடா்பாக இதுவரை 2,63,404 மோட்டாா் வாகன வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 1,44, 423 வாகன வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மாநகர எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வாகன விபத்துகளையும், போக்குவரத்து இடையூறுகளையும் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் கடந்தாண்டைவிட நடப்பாண்டில் 14 சதம் சாலை விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளன என மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் தெரிவித்தாா்.