தமிழகத்தில் 1-9 வகுப்பு வரையிலான தேர்வுகள் நடைபெறும், ரத்து என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பாப்பாக்குறிச்சி வரை செல்லும் புதிய பேருந்து வழித்தடத்தைத் தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது, "பேருந்து சேவைகள் இல்லாத வழித்தடங்களுக்கும் விரைவில் சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தனியார் பள்ளிகள் தங்களின் வாகனங்களைப் பராமரித்து இயக்க வேண்டும்.
இதனைப் பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்று, ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்த போது அளித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவில் தெரிவித்துள்ளார். தற்போது நீட்தேர்வு வரும் ஜீலை 17 ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பயிற்சி தமிழக அரசு சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான சட்டப் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 1-9 வகுப்பு வரையிலான தேர்வுகள் நடைபெறும், ரத்து என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்" என்றார். பேட்டியின் போது முன்னாள் எம்எல்ஏ., கே.என். சேகரன், மாநகராட்சி துணைமேயர் திவ்யா, கோட்டத்(மண்டலத்) தலைவர் மதிவாணன் உட்பட பலர் உடனிருந்தனர்.