வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 25 தம்பதிகளுக்கு சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி சதாபிஷேக மண விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மூத்த தம்பதிகளிடம் ஆசி பெற உறவினர்களும் பொதுமக்கள் குவிந்தனர்.
60 வயது தம்பதிக்கு சஷ்டியப்த பூர்த்தி, 70 வயது தம்பதிக்கு பீமரதசாந்தி, 80 வயது தம்பதிக்கு சதாபிஷேக மண விழா கொண்டாடப்படுவது குறைந்து வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில், வாசவி கிளப் மற்றும் ஆரிய வைசிய மகாஜன சபை வாயிலாக, 25 மூத்த தம்பதிகளுக்கு, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேக மண விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேத முறைப்படி, மூலிகை யாகங்களுடன் நடைபெற்ற மணவிழா.
வேத முறைப்படி, மூலிகை யாகங்களுடன் நடைபெற்ற, இந்த மணவிழா சிறப்பு பூஜைகளை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேத விற்பனர்கள், சர்வ மந்திரங்கள் ஓதி நடத்தினர்.
மணவிழா கண்ட மூத்த தம்பதிகளிடம் ஆசிபெற உறவினர்களும் பொதுமக்களும் குவிந்தனர். 93 வயது மண விழா கண்ட மூத்த ராமதாஸ் அம்சவேணி தம்பதியர் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.
இவ்விழாவில், வாசவி கிளப் பன்னாட்டு தலைவர் பட்டா.சுதர்சன், செயலாளர் ரவிச்சந்திரன், ஆளுநர் சதீஷ்குமார், துணை ஆளுநர் விழாத் திட்டத் தலைவர் சாய்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி வாசவி கிளப் நிர்வாகிகள், இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆசி பெற குவிந்த மக்கள்
இதுகுறித்து மண விழா திட்ட தலைவர் சாய்ராம் கூறியதாவது: முதியோர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தற்கால இளைஞர்கள் தவிர்த்து வருகின்றனர். எனவே, முதியவர்களுக்கு மரியாதை செய்து மகிழ்வித்து, ஆசீர்வாதம் பெறும் நோக்கில், இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
25 மூத்த தம்பதிகளுக்கு வேத முறைப்படி மண விழா நடத்தப்பட்டது. நிகழ்ந்த மகிழ்ச்சியோடு காணப்பட்ட இத்தம்பதிகளிடம் உறவினர்களும், பொதுமக்களும் ஆசி பெற ஆர்வம் காட்டினர். இதுபோன்ற விழாக்களினால், முதியோர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூடும். முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறையுமென எதிர்பார்க்கிறோம்' என்றார்.