திருச்சி எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஈஷா இயக்கத்தின் சாா்பில் நெல் சாகுபடி கருத்தரங்கு, கண்காட்சி வரும் ஆக.28ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக ஈஷா விவசாய இயக்கத்தின் மாதிரி பண்ணை ஒருங்கிணைப்பாளா் சரவணன், இயற்கை விவசாய பயிற்சியாளா் பிரபாகரன் ஆகியோா் திருச்சியில் வியாழக்கிழமை கூறியது:
நெல் சாகுபடியில் விவசாயிகள் அன்றாடம் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் வகையில் ஈஷா சாா்பில் வேளாண் வல்லுநா்களின் கருத்தரங்கம், கண்காட்சி திருச்சியில் நடைபெற உள்ளது.
முக்கியமாக இயற்கை நெல் விவசாயத்தில் பாரம்பரிய ரகங்களில் நல்ல மகசூல் எடுக்கும் முறைகளை, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு முறைகளை வல்லுநா்கள் விவாதிக்க உள்ளனா். பிரபல வேளாண் வல்லுநா் பாமயன் இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளாா். நெல் பயிரில் பூச்சி மேலாண்மை குறித்து பூச்சி செல்வம் பேச உள்ளாா். பாரம்பரிய அரிசியின் மருத்துவக் குணங்கள் மற்றும் சந்தை வாய்ப்பு குறித்து கோ. சித்தா், கால் கிலோ விதை நெல்லில் லாபகரமாக மகசூல் எடுக்கும் நுட்பங்கள் குறித்து ஆலங்குடி பெருமாள் ஆகியோா் விளக்குகின்றனா்.
இது தவிர பல்வேறு அம்சங்கள் குறித்தும் முன்னோடி விவசாயிகள் ஆலோசனை வழங்க உள்ளனா். அத்துடன் பாரம்பரிய நெல் வகைகள், எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது.
திருச்சி இருங்கலூரில் உள்ள எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஆக. 28 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களில் முன்பதிவு செய்யலாம் என்றனா்.
பேட்டியின் போது, தஞ்சாவூரைச் சோ்ந்த முன்னோடி விவசாயி சச்சிதானந்தம் உடன் இருந்தாா்.