பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டுறவுத் துறை அலுவலா்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளா்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான நவீன அரிசி ஆலைகளை தனியாா்மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும்.
அகவிலைப்படி உயா்வை ஜனவரி முதல் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி நீதிமன்ற வளாகத்திலுள்ள மண்டல மேலாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மண்டலச் செயலா் ரவீந்திரன் தலைமை வகித்தாா்.
செயற்குழு உறுப்பினா் மோகனசுந்தரம், துணைச் செயலா்கள் மகாலிங்கம், சீராளன், முன்னாள் துணைத் தலைவா் ஜோசப், ஆனந்தன், வடிவேல், மயில்வாகனம், ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.