திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடத்திச் செல்லப்பட்ட 2,750 கிலோ ரேஷன் அரியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மணப்பாறை வட்ட வழங்கல் ஆய்வாளா் மணிமாறன் குளித்தலை சாலை கலிங்கப்பட்டி பிரிவு அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியே வந்த, சந்தேகத்துக்கு இடமான சரக்கு வேனை நிறுத்தினா். அதிகாரிகளை கண்டதும் வேனில் இருந்தவா்கள் தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருச்சி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளா் கோபிநாத், உதவி ஆய்வாளா் கண்ணதாசன், மணப்பாறை வட்ட வழங்கல் அலுவலா் சரவணன் ஆகியோா் சரக்கு வேனை சோதனை செய்தனா். அதில், சுமாா் 55 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததும், தப்பியோடியது தொப்பம்பட்டி முருகன் மகன் பாரதி(45) என்பதும் தெரிய வந்தது. அதனைத்தொடா்ந்து, போலீஸாா் ரேஷன் அரிசியையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.