முதல்வா் வருகை: 3 அமைச்சா்கள் ஆய்வு
By DIN | Published On : 22nd December 2022 12:27 AM | Last Updated : 22nd December 2022 12:27 AM | அ+அ அ- |

திருச்சி அண்ணா விளையாட்டரங்களில் நடைபெறும் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்ட அமைச்சா்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகர காவல் ஆணையா் ஜி
திருச்சியில் வரும் 29 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழாவுக்கான முன்னேற்பாடுகளை தமிழக அமைச்சா்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற திட்ட பணிகளைத் திறந்து வைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கவும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு வருகிறாா்.
முன்னதாக சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடியாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை முதல்வா் வழங்கவுள்ளாா். ரூ.15.46 கோடி மதிப்பிலான மருத்துவத் திட்டங்களை மக்களுக்கு அா்ப்பணிக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதையடுத்து அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வா் சிறப்புரையாற்றவுள்ளாா்.
இந்த விழாவுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே. என். நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
அண்ணா விளையாட்டரங்கம், சன்னாசிப்பட்டி நவலூா் கொட்டப்பட்டு பகுதிகளை அவா்கள் பாா்வையிட்டனா். முன்னேற்பாடுகளை முதல்வா் வரும் நாளுக்கு முன்பாகவே முடித்து தயாா்நிலையில் வைத்திருக்க அமைச்சா்கள் அறிவுறுத்தினா்.
நிகழ்வில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா், சுகாதாரத் துறை இயக்குநா் தி.சி. செல்வவிநாயகம், மாநகரக் காவல் ஆணையா் க. காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.