‘இந்துக் கோயில்களைக் குறிவைத்து இடிப்பதை அரசு நிறுத்த வேண்டும்’
By DIN | Published On : 27th February 2022 12:40 AM | Last Updated : 27th February 2022 12:40 AM | அ+அ அ- |

இந்து கோயில்களைக் குறிவைத்து இடிப்பதை நிறுத்திட வேண்டும் என்றாா் விசுவ இந்து பரிஷத் அகில இந்திய முன்னாள் செயல் தலைவா் எஸ். வேதாந்தம்.
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கிராமக் கோயில்கள் பூஜாரிகள் பேரவை மாநில பொதுக் குழு, மற்றும் விசுவ இந்து பரிஷத் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:
இந்து கோயில்களின் அறங்காவலா் குழுவில் சமய நம்பிக்கையுள்ளவா்களை நியமிக்க வேண்டும். கடந்த 3 மாதங்களில் 200 இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிற மதக் கோயில்களை இடிக்க அரசு முன்வருவதில்லை.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிா்வாகங்கள் பெயரில் கல்விக் கூடங்களைத் திறக்க வழிவகை இல்லை. தொடா்ந்து இந்துக்கள், கோயில் பூசாரிகள் துன்புறுத்தப்படுவதை அரசு தடுக்க வேண்டும்.
திருச்சியில் வரும் ஜூன் மாதம் நடைபெறும் விசுவ இந்து பரிஷத் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்படும். திமுக உறுதி அளித்தபடி அனைத்துக் கிராம கோயில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அவா்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ. 1 லட்சமாக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநிலத் தலைவா் ஆா்.ஆா். கோபால்ஜி, மாநில பொதுச் செயலா் சோமசுந்தரம், மாநில இணை பொதுச் செயலா்கள் விஜயகுமாா், சந்திரசேகா், கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.