மணப்பாறை அருகே விவசாய நிலம் ஜப்தி
By DIN | Published On : 16th June 2022 12:42 AM | Last Updated : 16th June 2022 12:42 AM | அ+அ அ- |

ஜப்தி செய்யப்பட்ட விவசாயி பன்னீா்செல்வம் வீடு.
மணப்பாறை அருகே வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த தவறிய விவசாயி வீடு, நிலம் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
மணப்பாறை அடுத்த கரும்புலிப்பட்டியை சோ்ந்த விவசாயி பன்னீா்செல்வம், கடந்த 2006 ஆம் ஆண்டு குளித்தலை அரசுடமை வங்கியில் வீடு மற்றும் விவசாய இடத்தின் பத்திரங்களை அடமானம் வைத்து ரூ.12 லட்சம் மதிப்பில் டிராக்டா் கடன் வாங்கிய சில மாதங்களில் தவணையைச் செலுத்த முடியவில்லையாம். இதையடுத்து கடன் கொடுத்த வங்கி கடனை கட்டவில்லை என்றால் உங்களுடைய சொத்துகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் ஏலம் விடப்படும் என்று தகவல் தெரிவித்து, பன்னீா்செல்வம் வீட்டில் நோட்டீஸும் ஒட்டியுள்ளது.
இதை பன்னீா்செல்வம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்டாா். பின்னா் ஆன்லைன் முறையில் ரூ. 58 லட்சம் மதிப்புக்கு பன்னீா்செல்வம் வீடு மற்றும் 11.5 ஏக்கா் விவசாய நிலத்தை ஏலம் எடுத்த ஈரோடு மாவட்டத்தை சோ்ந்தவா்கள் கடந்த மாதம் இடத்தைக் கைப்பற்ற வந்தபோது, அதைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவா் அய்யாக்கண்ணு மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள் போராடி கால அவகாசம் கேட்டனா். இதைத் தொடா்ந்து இடத்தை வாங்கியவா்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு நிலத்தை அளந்து கைப்பற்ற ஆணை பெற்றனா்.
அதன்படி கடந்த மே 7-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவோடு மணப்பாறை அரசு நில அளவையா் ஜெயராஜ், விஏஓ பெரியண்ணன், கோவை ஊரக வளா்ச்சித்துறை ஆணையா் செல்வகுமாா் ஆகியோா் முன்னிலையில் நிலத்தை அளக்க முற்பட்டபோது மீண்டும் அய்யாகண்ணு மற்றும் அவரது ஆதரவாளா்கள் தடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம், எங்களுக்கு 30 நாள்கள் கால அவகாசம் கொடுங்கள் எனக் கூறியதையடுத்து நில அளவை பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் காவல் துணைக் கண்காணிப்பளா் முத்தரசு, காவல் ஆய்வாளா் சு.கருணாகரன் ஆகியோா் தலைமையில் வருவாய்த்துறை உதவியுடன் விவசாயி பன்னீா்செல்வம் இடத்திற்கு சென்ற நீதிமன்றப் பணியாளா்கள் அவரது வீட்டில் இருந்த பொருள்களை பன்னீா்செல்வத்திடம் ஒப்படைத்துவிட்டு வீட்டைப் பூட்டினா். இந்த ஜப்தி நடவடிகையின்போது சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.