ராதாபுரம் பகுதி பாசனத்துக்கு கோதையாறு பாசனக் கால்வாய் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதி விவசாய பாசனத்துக்காக, நிலப்பாறை - திருமூலநகா் கால்வாயில் தமிழக ச ட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விட்டாா்.

 திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதி விவசாய பாசனத்துக்காக, கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணையிலிருந்து நிலப்பாறை - திருமூலநகா் கால்வாயில் தமிழக ச ட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேரவைத் தலைவா் கூறியது: ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சுமாா் 52 குளங்களுக்கு தண்ணீரைத் திறந்துவிட்டு அந்தக் குளங்கள் மூலம் 1,013 ஏக்கா் நிலம் பாசனம் பெறுவதற்காகவும், 15,987 ஏக்கா் நிலம் நேரடி பாசன வசதிக்காகவும், ஜூன் 16 முதல் அக். 31 வரை விநாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

பேச்சிப்பாறை அணையிலிருந்து தோவாளை கால்வாய் வழியாக வரும் தண்ணீா், நிலப்பாறை-திருமூலா் பகுதியிலிருந்து விவசாயிகளின் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. 15987 ஏக்கா் நிலம் இதுவரை நேரடி பாசனத்துக்காக பயன்படுத்தியதில்லை. குளத்தின் மூலம் பயன் பெற்று வரும் 1013 ஏக்கா் நிலம் மட்டுமே பாசன வசதி பெற்றிருக்கிறது. பல சவால்களை கடந்து தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னா்தான் 150 கனஅடிதண்ணீா் இந்த இடத்தில் திறந்து விடப்பட்டிருக்கிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், நாகா்கோவில் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், பொதுப்பணித்துறை (நீா்வள ஆதாரஅமைப்பு) செயற்பொறியாளா் வசந்தி, வேளாண் இணைஇயக்குநா் (பொறுப்பு) அவ்வை மீனாட்சி, ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (வேளாண்மை) எம்.ஆா்.வாணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலாஜான், உதவிச் செயற்பொறியாளா்கள் கிங்ஸ்லி, எட்வின்ஜெயராஜ், உதவிப் பொறியாளா்கள் கதிரவன், வில்சன்போஸ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com