கரூரில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், மே தின ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
44 தொழிலாளா் நலச்சட்டங்களை ஒருங்கிணைத்து, மத்திய அரசு அமல்படுத்த முன்வந்துள்ள 4 தொழிலாளா் தொகுப்பு சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கரூா் பேருந்து நிலைய ஆா்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் மாநிலத் தேசிய அனைத்து உடலுழைப்பு பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவா் தங்கவேல் தலைமை வகித்தாா். செயலா் செல்வராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
ஒருங்கிணைப்பாளா் ராஜசேகா் விளக்கவுரையாற்றினாா். கரூா் மாவட்டச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் பேசினா். ஏராளமான தொழிற்சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.