உடல் உறுப்பு தானம் செய்த விவசாயி குடும்பத்தினருக்கு திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் பாராட்டி நிதியுதவி அளிக்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம் குமுளூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி இளங்கோவன் கடந்த ஏப். 4 ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ஏப். 7 ஆம் தேதி மூளைச் சாவு ஏற்பட்டது.
இதையடுத்து இளங்கோவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன் வந்து, திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானமாக அளித்தனா்.
தகவலறிந்த திருச்சி மக்கள் சக்தி இயக்கத்தினா் மே தினத்தையொட்டி இயக்கத்தின் மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம், மாநில துணைப் பொதுச் செயலா் சந்திரசேகா், மணப்பாறை திருக்கு புலவா் நாவை. சிவம் உள்ளிட்டோா் குழுமூா் கிராமத்தில் உள்ள இளங்கோவன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாராட்டுச் சான்று வழங்கி, ரூ. 11000 நிதியுதவி அளித்தனா்.