திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதச் சென்ற மாணவி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காசுக்கடை தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகள் ஸ்ரீவேதநாயகி (16). கூத்தூரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவியான இவா் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத வியாழக்கிழமை தனது அண்ணன் கரணுடன் மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா்.
உத்தமா்கோயில் மேம்பாலத்தில் சென்ற இவா்களது வாகனமும் எதிரே வந்த பைக்கும் திடீரென மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்ரீவேதநாயகி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். காயமடைந்த கரண் சிகிச்சை பெறுகிறாா். விபத்து குறித்து கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.