மணப்பாறை: மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். கிடா வெட்டி, அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து, கரும்புள்ளி-செம்புள்ளி குத்தி, கரும்பு தொட்டில் எடுத்தல் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரத்தின் மையத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 17 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குட உற்சவம் நேற்று முடிந்த நிலையில், இன்று திங்கள்கிழமை கோவில் முன்பு நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
இதையும் படிக்க: அன்னைத்தமிழில் அர்ச்சனை கட்டாயமில்லை: அமைச்சர் சேகர்பாபு
மேலும் கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. காளியம்மன் கோயிலில் இருந்து அக்னிசட்டி எடுத்தல், அலகுகுத்துதல், கரும்புள்ளி-செம்புள்ளி குத்துதல், கரும்பு தொட்டில் எடுத்தல் என நேர்த்திக்கடன்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். குழந்தைகள் கரும்புள்ளி-செம்புள்ளி குத்தியும், 10 அடி, 12 அடி, காவடி, மயில் தோகை என விதவிதமான அலகு குத்தி பவனி வந்த பக்தர்கள், அக்னி காவடி என களைகட்டிய திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாலையில் அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் வேடபரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியைக் காண சுற்று வட்டார கிராம மக்கள் லட்சக்கணக்கில் ஆலயத்தில் குவிந்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.